1 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் வரலாறும் சிறப்புகளும்
தொகுப்ப:-
சிவதாஸன்
ஜகன்நாதன்
திங்கள் ,ஜூலை ,22, 2024
என்னைப் பற்றிய ஒரு சிறு முன்னுறை. அடியேன் இந்தியாவில் தமிழ் நாட்டில் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பூம்புஹார் நகருக்கு அருகில் உள்ள பெருமை மிகு சிவஸ்தலமான திருவெண்காடு என்னும் பெரும் பதியில் 1945 ஆம் ஆண்டு பிறந்தவன்.நான் B.Sc மயிலாடுதுறையிலும்,பின் 1966 ஆம் ஆண்டுமுதல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் MBBS பட்டப் படிப்பும் பின் 1981 ஆம் ஆண்டு அதே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் M.D (Gen Medicine ) பட்டம் பெற்று தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் 30 ஆண்டுகள் சிறப்பு மருத்துவ நிபுணராகவும்,இணை இயக்குணருக்கிணையான பதவியில் பணியாற்றி 2003 ல் பணி ஓய்வு பெற்று 2022 வரை சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த சிறப்பு நிபுணராக பணியாற்றி என் பணியினை நிறைவு செய்து தற்பொழுது அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி என் மகள்,மகன் மற்றும் 4 பேரக்குழந்தை களுடன் வாஷிங்க்டன் பகுதியில் வாழ்ந்து வருகிறேன்
தற்பொழுது இலவச மருத்து ஆலோசனைப் பணியிலும் முழு நேர ஆன்மீகப் பணியிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் தொண்டே மஹேஸன் தொண்டு என்ற எண்னத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன்.
இந்த நீண்ட தொடரில் உன்னதமான் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் பற்றி என்னுடைய சிற்றறிவுக்கு நான் அறிந்துள்ளதை மற்ற ஆன்மீக உள்ளங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.என்னுடைய பதிவுகள் நான் கற்றவை, கற்றவர்களிடமிருந்து கேட்டவைகளின் சாரங்களே ஆகும்.நிறைவானவைகளை எடுத்துக் கொண்டு குறைகள் இருப்பின் அவைகளை எனக்கு சுட்டிக் காட்டி திருத்துமாறும் அன்போடு விழைகிறேன்.
ஸ்ரீலலிதா சஹ்ஸ்ரநாமம் ஒரு உன்னதமான மந்திரமாகும்.அதன் பெருமைகள் சொல்லவனாவாகும். இன்று அந்த உன்னத மந்திரத்தினப் பற்றிய ஒரு முன்னுறையை தரலாம் என எண்ணி இந்தப் பதிவை இன்று பதிவு செய்கிறேன்.நாளைமுதல் ஸ்லோகங்களின் வர்னையை தொடரலாம் என எண்ணுகிறேன்.
அம்பிகையின்
துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா
ஸஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர்- ஹயக்ரீவர்.
உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். உபதேசம்
செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உப தேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல.
பிரம்மதேவரிடம்
இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக
(குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்திருக்கிறார்.
உபதேசம்
பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை
மட்டும் இங்கே பார்க்கலாம். சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது
மகாவிஷ்ணு, பிரம்மா, இந் திரன் முதலான
தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடி தாழ்ந்து தென்கோடி உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரைத் தென்திசைக்கு
அனுப்ப, பூமி சம நிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே
தெரிந்ததுதான்.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை
அனைவரும் ஒரு பக்கம் இருக்க.... அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி
சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த
அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பது தானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர்
அகஸ்தியர்.
அப்படிப்பட்ட
மகாபுருஷர் லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார். ஞானத்தின் வடிவமான
ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர் கேட்டிருக்கிறார் என்றால்,
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க
வேண்டும்.
பதினெட்டு
புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற
பகுதியில் லலிதா தேவியின் திரு அவ தாரமும், சரிதமும்
கூறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின்
ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா ஸஹஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த
ஸ்தோத்திரம் உள்ளது.
ஹயக்ரீவர்
என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப்படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம்
செய்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அகஸ்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி
வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப்
போற்றப்படுபவர்கள் (லோபாமுத்ரார்ச்சிதா - லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள்
என்றே ஒரு நாமம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உண்டு).
தேவியின்
கட்டளைக்கிணங்க வாசினி முதலான வாக் தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக
ஸ்தோத்திரத்தைச் செய்ததாகவும் புராணக் குறிப்பு உண்டு.
ஸஹஸ்ரநாம நூல்களிலேயே தனித் துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக
லலிதா ஸஹஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும்,
ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும்,
காம்பீர்யத்தோடும் இதில் முன் வைக்கப்படுகின்றன. வேதாந்த தத்துவ
உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம்
ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று
வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள்.
இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்துள்ளது.
லலிதா
ஸஹஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும்
உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட
சித்தாந்தக்கருத்தை விளக்குவதாக உள்ளது. அம்பாளின் ஆயிரத் தெட்டு நாமங்களும்
1.ஸ்ரீமாதாவின்அவதாரம்,
|
2. கேசாதிபாதவர்ணனை
(ஸ்தூல ரூபம்),
|
3. பண்டாசுரவதம், |
4.மந்த்ரவர்ணனை(சூட்சுமரூபம்),
|
5. குண்டலினீரூபம்,
|
6. பக்தஅனுக்ரஹம், |
7. நிர்க்குணஉபாசனை,
|
8. சகுணஉபாசனை, |
9. பஞ்சப்ரஹ்மரூபம், |
10. க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞரூபம்,
|
11. பீடங்களும், அங்கதேவதைகளும், |
12. யோகினீதியானம் |
13. விபூதிவிஸ்தாரமும், மார்க்கபேதங்களின்சமரசமும், |
14. சிவசக்திஐக்கியம், |
ஆகிய
வரிசையில் பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உள்ளது.
தேவர்களின்
வேண்டுதலுக்கு இணங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில்
பாசம், அங்குசம்,
கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை
ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா
ஸஹஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது.
சிதக்ஞனிகுண்ட ஸம்பூதா - அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள், ராகஸ்வரூப பாசா’ட்யா - ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள், க்ரோதா கார அங்குசோ’ஜ்வலா - தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்கு சத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள்
மனோரூப இக்ஷு கோதண்டா - மனமாகிய கரும்புவில்லை உடையவள்,
பஞ்சதன்மாத்ர ஸாயகா - ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள்.
பாசக் கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும்,
பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய
வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு
விளையாடுகிறாள்!.
தத்துவ
அளவில் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப்பட்டது என்பது இந்த
நாமங்களின் பெருங்கடலின் ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம்.
நிர்த்வைதா - த்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள்,
த்வைத-வர்ஜிதா இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள்,
ஸாமரஸ்ய பராயணா - சமரசத்தில் நிலை பெற்றவள்
என்பனவும் அன்னையின் திருநாமங்களே. இந்த
அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தை நாம் பாராயணம் செய்யவும்,
தியானம் செய்யவும் வேண்டும்.
அப்படி
தியானம் செய்பவர்களுக்கு நிர்க் குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் -எல்லாம்
அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும்
அவளை அடைவதற்கான மார்க் கங்களாகவே திகழும்.
தத்துவங்களே அன்னையின் இருக்கைகளாகவும் (தத்வாஸனா), காற்சிலம்பின் மணி களாகவும், கையில் ஏந்தி விளையாடும் பூக்களாகவும், மகா காளிக் கோலத் தில் அவள் அணியும் மண்டையோட்டு மாலைகளாகவும் ஆகிவிடுகின்றன!
அதுவே
லலிதா ஸஹஸ்ரநாமம் அளிக்கும் பரவச அனுபவம். இந்த துதியைப் பொருள் உணர்ந்து
படிக்கும் போதும், தியானிக்கும் போதும் தர்க்க மனத்தின்
எல்லைகளுக்கு அப்பால் அது சுழன்றடித்துச் செல்கிறது. பக்தியுடன் இதைப் பாராயணம்
செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து மொழியின்
சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
இவ்வளவு சிறப்புகள் பெற்று தன்னுள் அனைத்து தெய்வ சக்திகளையும் அடக்கியுள்ள லலிதா
ஸஹஸ்ர நாமத்தை நாமும் கூறுவதால் இக, பர சுகத்தை எளிதாக
அடையலாம்.
இந்தப் பதிவை
இத்துடன் நிறைவு செய்கிறேன்.நாளை முதல் லலிதா சஹஸ்ரநாமத்தின் ஸ்லோகங்களை விளக்கமாக பார்ப்போம்
ஓம் நமசிவாய:-
சிவதாஸன் ஜகன்நாதன்
திங்கள் ,ஜூலை ,22, 2024
No comments:
Post a Comment