Monday, March 25, 2024

 



இப்ரபஞ்சம் படைத்துக் காத்தருளும் ஈஸனாய்                                               இப்ரபஞ்ச மாளும் முத்தேவரில் முன்னவனாய்                                                      எப்பொழுதும் தேவர்க்கும் மாந்தர்க்கு மானானை                                    முப்போதும் தொழமீண்டு மிப்பிறவி வேண்டுமே        1

ஐந்தழகு முகங்கள் கொண்டு பரமனானாய்                                                 ஐந்தெழுத்து நமஸிவாய பஞ்சாக்ஷர மானாய்                                                     ஐந்தும் தானேயாகி பஞ்சபூதங் களானாய்                                                ஐந்துமடக்கிமீண்டு மிப்பிறவி வேண்டுமே      2     

கொன்றையும்  எருக்கும் நதியொடு முடிகொண்டாய்                                  நன்றானநூலும் கபாலமும் நடுமார்பில் அணிந்தாய்      வென்றபுலித்தோல் இடையில்  நன்றாக அணிந்தாய்                என்றென்றுமுனைக் காணமீண்டு மிப்பிறவி வேண்டுமே  3

 

முப்புறமெரித்து மூவுலகோரும் மகிழக் காத்தாய்                                   எப்பொழுதும் தொழுவோர் வம்சம் காக்கநின்றாய்                                               தப்பாமல் ஆணவத்தக்கன் யாகமழித் தருளினாய்                                          எப்பொழுதும் தொழமீண்டு மிப்பிறவி வேண்டுமே     4

கற்றகல்வியும் பெற்ற வித்தையும் கடலாகுமே                                                                        நற்றமிழால் இசைத்தவை நல்லருளே யருளுமே                                                                      பெற்றமக்களும் சுற்றமும் நலமோடு வாழ்வாரே                                                                உற்றநினதடி தொழமீண்டு மிப்பிறவி வேண்டுமே     5

நித்தமும் குறையா நலங்களருளும் நடேசனே                                                  மத்தமும்மதிநதியும் முடிகொண்ட மஹேசனே                                          பித்தனாய் பேயனாய் சுந்தரனுக்கருளிய பரமனே                                                               எத்தனைப் பிறவியினும்மீண்டு மிப்பிறவி வேண்டுமே     6

தண்டையணிந்து தூக்கியாடிய திருவடிகளும்                                                          கொண்ட திரிசூலமோ டிலங்கும் திருக்கரங்களும்                                              நன்றான முப்புரிநூலும் கபாலமு மிலங்குமார்பும்                                           கண்டுகண்டு மகிழமீண்டு மிப்பிறவி வேண்டுமே     7

வேலவனைத் தரத்திறந்த மூன்றாம் நுதற்கண்ணும்                                                                      காலனை உதைத்த தண்டையணி திருவடிகளும்                                               மாலவனுக்கு சக்கரமருளிய வழகுக் கரங்களும்                                   காலமெல்லாம் காணமீண்டு மிப்பிறவி வேண்டுமே     8

பேரழகுத் திருமேனி  பரவிடும் பரமனைக்காண                             பேரருட்கருணை பொழி கருணா கரனைக்காண                                          பேராயிரமுடை போராளன் பெம்மானைக் காண                               பேரருளானை வேண்ட மீண்டு மிப்பிறவி வேண்டுமே     9

திரிபுரமெரிக்கப் பினாகம் கொண்ட கருணாளனை                               கரமெட்டில்   படைக்கலங்கள் பலகொண்ட பரமனை                                     வரங்கள் வற்றாதருளும் வள்ளல் விஸ்வேசனை                                      கரம்தூக்கித் தொழுதிடமீண்டு மிப்பிறவி வேண்டுமே     10


 

அத்வைதமாய் யாவும் தானேயான அரனை                                                                                   மத்தமும் மதியும் முடிகொண்ட மஹேசனை                                                                      எத்தனையும் தருவனை ஜகன்நாதன் பாடியவை                                                             அத்தனையும் தவறாது தருவது திண்ணமே


No comments:

Post a Comment